23 August, 2007

உன்னை நிறைத்த அறை



உன்னை நிறைத்த உனதறையில்
நீயில்லாதபோது நுழைந்தேன்

உறங்க நீ பட்ட பிரயத்தனங்கள்
படுக்கையில் கசங்கிக் கிடந்தன
சுவர் மூலையில்
உறுப்பின் அசௌரியங்கள்
சுருண்ட
உன் உள்ளாடைகள் கிடந்தன

அலம்பாத தேநீர் குப்பியில் ஒட்டியிருந்தது
உன் எச்சிலின் இனிப்பு
விரித்துக் கிடத்திய புத்தகத்திலிருந்து
கவிதையின் நெகிழ்ச்சி
அறையெங்கும் சுழன்றது

உன்னோடு வாய்க்காத பொழுதை
உன் வாழ்முறை இறைந்த அறையில்
உன் ஒழுங்கீனங்களோடு கழித்தேன்.

Credits : மா.சு. சரவணன்
Thanks: text : Kalachuvadu http://www.kalachuvadu.com Photos : allposters.com

No comments: